பெரியார் பார்வையில் இஸ்லாம் (அ) ஏகத்துவம்

(’இஸ்லாம்’ பற்றி பகுத்தறிவு கொள்கை கொண்ட பதிவர்கள் சிலரின் மதிப்பீடுகளை-பின்னூட்டங்களை தமிழ்மணத்தில் படித்துவிட்டு - பகுத்தறிவு தந்தையின் மதிப்பீடு என்னவென்று தேடியபோது கிடைத்ததை மீள்பதிவு செய்திருக்கிறேன்).

சகோதரர்களே! 69 ஆதிதிராவிடர்கள் முகமதியர்களாகி விட்டதால், அவர்களுடைய பாவங்களெல்லாம் மன்னிக்கப்பட்டு விட்டதென்றோ, அவர்களுக்கு "மோட்ச லோகம்' கூப்பிடும் தூரத்திற்கு வந்துவிட்டதென்றோ, "கடவுளோடு கலந்து விட்டார்கள்' என்றோ கருதி நான் மகிழ்ச்சி அடையவில்லை. இவைகளை நான் ஏற்றுக் கொள்ளுவதும் இல்லை. மற்றவர்களை நம்பும்படிச் சொல்வதும் இல்லை. அன்றியும், ஒரு மனிதன் மதம் மாறுவதால் அவனுடைய செய்கைக்கும், எண்ணத்திற்கும் தகுந்த பலன் அடைவதில் வித்தியாசமுண்டு என்பதை நான் ஒப்புக் கொள்வதில்லை.
இந்துவாயிருந்து பசுவைக் கொன்றால் பாவம் என்றும், முமகமதியனாயிருந்து பசுவைக் கொன்று தின்றால் பாவமில்லை என்றும், மதத்தின் காரணமாக கருதுவது மூடநம்பிக்கையே ஒழிய, இரண்டுவித அபிப்பிராயத்திலும் அர்த்தமே இல்லை. உலகத்தில் உள்ள சகல மதங்களும் மூட நம்பிக்கையின் மீதே கட்டப்பட்டிருக்கின்றன. ஆகையால், பாவபுண்ணியத்தையும், மோட்ச நரகத்தையும் ஆதாரமாய் வைத்தும் நான் மகிழ்ச்சியடையவில்லை.

மற்றென்னவென்று கேட்பீர்களேயானால், இந்து மதம் என்பதிலிருந்து மதம் மாறினதாகச் சொல்லப்படும் 69 ஆதிதிராவிடர்களும், பிறவியின் காரணமாக அவர்களுக்குள்ள இழிவிலிருந்து விடுதலை அடைந்ததோடு, பாமரத் தன்மையும் காட்டுமிராண்டித்தனமுமான மிருகப்பிராயத்திலிருந்தும், அறியாமையிலிருந்தும் சிறிது விடுதலை அடைந்தவர்களானார்கள் என்பதற்காகவே மகிழ்ச்சியடைகின்றேன்.

அதாவது, மேற்கண்ட 69 பேர்களுக்கும் தீண்டாமை என்பது போய்விட்டது. இனி ஒருவன் அவர்களைப் பறையன், சக்கிலி, சண்டாளன் என்று இழிவாய்க் கூற முடியாது. அவர்களும் மற்றவர்களை "சாமி, சாமி, புத்தி' என்று கூப்பிட்டுக் கொண்டு தூர எட்டி நிற்க வேண்டியதில்லை. மற்ற மனிதர்களின் காலில் விழுந்து கும்பிட வேண்டியதில்லை. ஊரை விட்டு வெளியில் குடி இருக்க வேண்டியதில்லை. குளிக்கத் தண்ணீரில்லாமல், குடிக்கத் தண்ணீரில்லாமல் திண்டாட வேண்டியதில்லை.

வண்ணான், நாவிதன் இல்லாமல் அழுக்குத் துணியுடனும், கரடிபோல் மயிர் வளர்த்துக் கொண்டும், பார்ப்பவர்களுக்கு அசிங்கமாகத் தோன்றும்படி வாழவேண்டியதில்லை. இனி எந்த பொதுத் தெருவிலும் நடக்கலாம்; எந்த வேலைக்கும் போகலாம்; யாருடனும் போட்டி போடலாம்; அரசியலில் சமபங்கு பெறலாம்; மத சம்பந்தமாகவும் இனி அவர்கள் தங்கள் கோயிலுக்குள் போக தாராள உரிமை உண்டு; வேதம் படிக்க உரிமையுண்டு.

எனவே, இவர்கள் பொருளாதாரக் கஷ்டத்திலும், அறிவு வளர்ச்சித் தடையிலும், சமூக இழிவிலும், சுயமரியாதைக் குறைவிலும், அரசியல் பங்குக் குறைவிலுமிருந்து ஒருவாறு விடுதலை அடைந்து விட்டார்கள் என்பது போன்றவைகளை நினைக்கும்போது மகிழ்ச்சியடையாமலிருக்க முடியவில்லை. ஏனெனில், தீண்டாமை, நெருங்காமை, பார்க்காமை, பேசாமை முதலாகிய சகிக்க முடியாத கொடுமைகள் முதலாவதாக மதத்தின் பேரால், வேத சாஸ்திரங்களின் பேரால், கடவுள்களின் பேரால் உள்ளவைகள் எல்லாம் அடியோடு நீங்க வேண்டும் என்கின்ற தீவிர ஆசையே இம்மாதிரி நினைக்கச் செய்கின்றது.

ஆகையால், தீண்டாமை முதலிய கொடுமை ஒழிய வேண்டும் என்கின்ற கருத்துள்ளவர்களுக்கும், ஒற்றுமையை எதிர்பார்க்கும் கருத்துள்ளவர்களுக்கும், மக்களுக்கு சுயமரியாதை உணர்ச்சியை ஊட்ட வேண்டும் என்னும் கருத்துள்ளவர்களுக்கும் நமது நாட்டில் இப்போது உள்ள முக்கியவேலை, முதலில் தீண்டப்படாதவர்கள் முகமதியராவதை ஆட்சேபியாதிருப்பதேயாகும் என்பது, எனது தாழ்மையானதும், கண்ணியமானதுமான அபிப்பிராயம்.

நிற்க. சிலர் முகமதிய மதம் முரட்டு சுபாவத்தை உண்டாக்குகின்றது என்று எனக்கு எழுதி இருக்கிறார்கள். அது வாஸ்தவமானால், தீண்டப்படாதவர்களுக்கு அவர்களது தீண்டாமை ஒழிய முகமதிய மதத்தைச் சிபாரிசு செய்வதற்கு அதுவே ஒரு நல்ல காரணம் என்றே கருதுகிறேன். முகமதிய மதம் முரட்டு சுபாவத்தை உண்டாக்குவது உண்மையானால், அதில் சேர்ந்த இவர்கள் இனிமேலாவது இவ்வளவு தாழ்மையாக நடந்து கொள்ள மாட்டார்கள் அல்லவா? மற்றவர்களும் அவர்களது முரட்டு சுபாவத்தைக் கண்டு பயந்து மரியாதையாய் நடந்து கொள்ள இடமேற்படும் அல்லவா?

ஆகையால், இந்து சமூகத்தில் உண்மையான சமத்துவமும் ஒற்றுமையும் ஏற்படும்வரை தீண்டப்படாதவர்கள் கும்பல் கும்பலாய் முகமதியர் ஆவதைத் தவிர வேறு மார்க்கமில்லையாதலால், நாம் அதை ஆட்சேபிக்க முடியாதவர்களாய் இருக்கின்றோம். தவிரவும், மதத்தினிடத்திலோ இந்து சமூகத்தினிடத்திலோ கவலையுள்ளவர்களுக்கு இதனால் ஏதாவது சங்கடம் இருப்பதாயிருந்தால், அவர்கள் தாராளமாய் வெளிக்கிளம்பி வந்து தீண்டப்படாத மக்களுக்கு இருக்கும் கொடுமையையும் இழிவையும் நீக்க முன்வரட்டும். அவர்களோடும் எப்போதும் ஒத்துழைக்கத் தயாராயிருக்கிறேன்.

நன்றி: http://www.keetru.com/rebel/periyar/12.php

ஐந்து மணிக்குத் தீண்டத்தகாதவன் 5.30 மணிக்குத் தீண்டத்தகுந்தவன்!

நான் இந்து மதத்தைப் பற்றியோ, இஸ்லாம் மதத்தைப் பற்றியோ பேசுவது என்பதில் இரண்டு மதத்தினுடையவும் ஆதாரங்களை ஆராய்ச்சி செய்து பேசுவதாக யாரும் கருதிவிடாதீர்கள். அந்த வேலையை ஒரு பரீட்சை மாணவனுக்குக் கொடுத்து விடுங்கள். அதில் என்ன இருக்கின்றது என்பதில் எனக்குக் கவலை இல்லை. ஆனால், நான் பேசுவது என்பது, இரண்டு மதங்களைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் பெரும்பான்மை மக்களிடையே இருந்து வரும் பிரத்தியட்சக் கொள்கைகள் சம்பந்தமான காரியங்களையும், அதனால் அவரவர்கள் பிரத்தியட்சத்தில் அடைந்துவரும் பலன்களையும் பற்றித்தான் பேசுகிறேன்.

அந்தந்த மதங்களில் மக்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள்? அதனால் சமூகம் என்ன பயனடைந்திருக்கிறது? என்பன போன்றவைகள்தான் மதத்தின் மேன்மையை அளக்கும் கருவியாகும். அப்படிப் பார்ப்போமானால், அனேக விஷயங்களில் இந்து மதத்தைவிட இஸ்லாம் மதமே மேன்மையுடையது என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

இஸ்லாம் மக்களிடத்தில் தங்களுக்குள் சமத்துவம், சகோதரத்துவம், ஒற்றுமை, அன்பு முதலிய குணங்கள் இருக்கின்றன. வீரம் இருக்கின்றது. வீரம் என்றால் லட்சியத்திற்கு உயிரைவிடத் துணிவது என்பதுதான். இஸ்லாம் மதத்தில் உயர்வு தாழ்வு இல்லை. அவர்களுக்குள் தீண்டாதவன் இல்லை. அவர்களது தெருவில் நடக்கக்கூடாதவன், குளத்தில் இறங்கக்கூடாதவன், கோவிலுக்குள் புகக்கூடாத மனிதன் இல்லை. இதை யோக்கியமான இந்துக்கள் ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்.

இந்துக் கொள்கையில் வேறு எங்கு ஒற்றுமையாய் இருந்தாலும் சமூக வாழ்விலும் கடவுள் முன்னிலை என்பதிலும், மனிதன் மிருகத்தைவிடக் கேவலமாய் நடத்தப்படுகின்றான். இதை நேரில் காண்கின்றோம். இதைத்தான் அன்பு மதம், சமத்துவ மதம் என்று இந்துக்கள் தைரியமாய்ச் சொல்லுகின்றார்கள்.

மதத் தத்துவ நூலை, வேதம் என்பதை இஸ்லாம் மதத்தில் உள்ள செருப்புத் தைக்கும் சக்கிலியும், மலம் அள்ளும் தோட்டியும் படித்தாக வேண்டும்; பார்த்தாக வேண்டும்; கேட்டாக வேண்டும். இந்துமத வேதம் என்பதை ஒரே ஒரு சிறு கூட்டம் தவிர பார்ப்பனன் தவிர மற்ற யாவரும் அவன் பிரபுவானாலும், ஏழையானாலும், யோக்கியனானாலும், அயோக்கியனானாலும் சரி, ஒருவனுமே படிக்கவும் பார்க்கவும் கேட்கவும் கூடாது.

இஸ்லாம் கொள்கை மக்களை ஒன்று சேர்க்கிறது. இந்தியாவில் கொஞ்ச காலத்திற்கு முன் ஒரு கோடியைவிடக் குறைந்த எண்ணிக்கையுள்ள முஸ்லிம்கள் இன்று 8 கோடி மக்களாய்ச் சேர்ந்திருக்கிறார்கள். இன்று யாவரையும், எப்படிப்பட்ட இழிவானவர் என்று இந்து மார்க்கத்தாரால் கருதப்பட்டவர்களையும் தனக்குள் சேர்த்துக் கொள்ளக் கையை நீட்டுகின்றது. இந்துக்களின் கொள்கையோ எப்படிப்பட்ட மேலானவன் என்று மதிக்கப்பட்டவனையும் உள்ளே விட மறுத்து, வாசற்படியில் காவல் காக்கின்றது; தன்னவனையும் வெளியில் பிடித்துத் தள்ளுகின்றது.

ஆதித் திராவிடர்களை நான், ‘இஸ்லாம் மதத்தில் சேருங்கள்' என்று சொன்னதற்காக அனேகம் பேர் என்மீது கோபித்துக் கொண்டார்கள். அவர்களைப்பற்றி நான் கோபித்துக் கொள்ளவில்லை. அவர்களுக்குச் சொந்த அறிவும் இல்லை; சொல்வதைக் கிரகிக்கச் சக்தியும் இல்லை. சிலருக்குத் தங்கள் மேன்மை போய்விடுமே தங்களுக்கு அடிமைகள் இல்லாமல் போய்விடுமே என்கின்ற சுயநல எண்ணம். ஏனெனில், மோட்சம் அடைவதற்காக என்று நான் ஆதித் திராவிடர்களை இஸ்லாம் கொள்கைகளைத் தழுவுங்கள் என்று சொல்லவில்லை; அல்லது "ஆத்மார்த்தத்திற்கோ' "கடவுளை அடைவதற்கோ' நான் அப்படிச் சொல்லவில்லை. ஆதித் திராவிடர்களின் தீண்டாமையைப் போக்குவதற்குச் சட்டம் செய்வது, சத்தியாக்கிரகம் செய்வது போலவே இஸ்லாம் கொள்கையைத் தழுவுவது என்பதும் ஒரு வழி என்றே சொன்னேன்; இனியும் சொல்கின்றேன்.

சட்டம் செய்வது கஷ்டம்; செய்தாலும் நடைமுறையில் வருவது கஷ்டம். சத்தியாக்கிரகம் செய்வதும் கஷ்டம்; செய்தாலும் வெற்றி பெறுவது சந்தேகம். இவற்றால் துன்பமும் தோல்வியும் கிடைத்தாலும் கிடைக்கலாம். ஆனால், ஆதித் திராவிடர்களுக்கு இஸ்லாம் கொள்கையை ஏற்றுக் கொண்டேன் என்று சொல்வதில் என்ன கஷ்டம்? அதில் தோல்வியோ துன்பமோ ஏதாவது உண்டா? அல்லது, அன்னியருக்கு ஏதாவது கஷ்டம் உண்டா? அவன் ஆத்திகனாய் இருந்தால் என்ன? நாத்திகனாய் இருந்தால் என்ன? உண்மை இஸ்லாம் ஆனால் என்ன? பொய் இஸ்லாம் ஆனால் என்ன? உலகில் மதங்கள் ஒழிக்கப்படும்போது, இஸ்லாம் மதமும் ஒழியும்.

ஏன் கிறிஸ்து மதத்தைக் தழுவக் கூடாது? ஆரிய சமாஜத்தைத் தழுவக் கூடாது? கிறிஸ்து மதக் கொள்கைகள் புத்தகத்தில் எப்படி இருக்கின்றன என்பதைப் பற்றி நான் சொல்ல வரவில்லை. நடைமுறையில் பறை கிறிஸ்தவன், பார்ப்பாரக் கிறிஸ்தவன், வேளாளக் கிறிஸ்தவன், நாயுடு கிறிஸ்தவன், கைக்கோளக் கிறிஸ்தவன், நாடார் கிறிஸ்தவன் என்பதாகத் தமிழ்நாடு முழுவதும் உள்ளனர். இஸ்லாம் மார்க்கத்தில் இவ்வித வேறுபாடுகள் இருக்கின்றனவா? கிறிஸ்தவ சகோதரர்கள் கோபிக்கக் கூடாது; வேண்டுமானால், வெட்கப்படுங்கள் என்று வணக்கமாய்த் தெரிவித்துக் கொள்கிறேன். ஆரிய சமாஜம் என்பதும் ஒரு வேஷந்தான்.
(சாத்தான்குளத்தில் 28.7.1931 அன்று தந்தை பெரியார் ஆற்றிய உரை. ‘குடி அரசு' 2.8.1931) நன்றி: http://www.keetru.com/rebel/periyar/10.php



7 பின்னூட்டங்கள்:

இப்னு பஷீர் said...

பொதுவாக மதம் / ஆன்மீகம் என்பன கடவுளுக்கும் மனிதனுக்குமிடையில் தொடர்பு ஏற்படுத்த மட்டுமே உதவும் கருவிகளாக பார்க்கப் படுகின்றன. மரணத்திற்குப்பின் மோட்சம், சொர்க்கம், நரகம் அல்லது மறுபிறவி என இன்னொரு வாழ்க்கை இருப்பதை எல்லா மதங்களுமே போதிக்கின்றன. அதனாலேயே மரணத்தை நெருங்குபவர்களுக்கு மதத்தில் ஈடுபாடு அதிகரிக்கிறது. ஆன்மீக சிந்தனைகள் அதிகம் தோன்றுகின்றன. வாழ்வின் இந்த இறுதிக்கட்டம் வரும்வரை அவர்களுக்கு மதத்தின் தேவை மிகக் குறைவாகவே இருக்கிறது.

மதங்கள் பற்றிய இவ்வாறான பொதுப்படையான கருத்துக்களிலிருந்து, தந்தை பெரியாரின் இஸ்லாம் பற்றிய கண்ணோட்டம் அதிகம் மாறுபடவில்லை. "உலகத்தில் உள்ள சகல மதங்களும் மூட நம்பிக்கையின் மீதே கட்டப்பட்டிருக்கின்றன" என்ற அவரது கூற்று இதைத்தான் தெளிவு படுத்துகிறது. மறுமை வாழ்வு அல்லது மறுபிறவி ஆகியவற்றில் நம்பிக்கையற்றிருந்த அவருக்கு மதங்கள் போதிக்கும் பாவபுண்ணியமும், மோட்ச நரகமும் திருப்தியளிக்கவில்லை.

ஆனால், இஸ்லாம் மதங்கள் பற்றிய இந்தப் பொதுப்படையான வரையறையிலிருந்து வேறுபட்டது. வெறும் வணக்க வழிபாடுகளை மட்டுமே கொண்டதல்ல இஸ்லாம். வணக்க வழிபாடுகளோடு தனது இவ்வுலக வாழ்வை சீர்படுத்திக் கொண்டவர்கள் மட்டுமே சுவனத்தை அடைய முடியும் என்கிறது இஸ்லாம். அவ்வாறு சீர்படுத்திக் கொள்வதற்குத் தேவையான வழிகாட்டுதல்களையும் இஸ்லாம் வழங்குகிறது.

இஸ்லாமின் இந்த வழிகாட்டல்களை மாறுபட்ட கண்ணோட்டத்தில் தந்தை பெரியார் அணுகியிருப்பாரேயானால், தனது சீர்திருத்தக் கொள்கைகள் பெருமளவில் இஸ்லாமின் கொள்கைகளுடன் ஒத்துப் போவதை கண்டிருக்கக் கூடும்.

பிறைநதிபுரத்தான் said...

இப்னு பஷீர்,
தங்களின் வருகைக்கும்- தெளிவான பின்னூட்டத்துக்கும் நன்றி.

"உலகத்தில் உள்ள சகல மதங்களும் மூட நம்பிக்கையின் மீதே கட்டப்பட்டிருக்கின்றன" என்ற கூறுகிற தந்தை பெரியார், அனேக விஷயங்களில் இஸ்லாமிய வழிகாட்டல்கள் மேன்மையுடையது என்றார். உதாரணமாக, சட்டமும்-சமூக சீர்திருத்தமும் ஒழிக்க முடியாத தீண்டாமையை இஸ்லாம் ஒழிக்கும் என்று தாழ்த்தப்பட்டவர்களுக்கு உறுதியோடு சிபாரிசு செய்தார்.

இப்னு பஷீர், இந்த பதிவின் நோக்கமே, தங்களை பகுத்தறிவாளர்களாக - சீர்திருத்தவாதிகளாக கருதிக்கொண்டு இஸ்லாத்தின் மீதும் ‘பொத்தாம் பொதுவாக’ விமர்சனம் வைக்கிறவர்களிலிருந்து - தந்தை பெரியாரின் பார்வை எவ்வாறு ‘மாறுப்பட்டுள்ளது’ என்று சுட்டவே.

Anonymous said...

முஸ்லிம்களை - முகமதியர்கள் என்று விளித்து எழுதும் ‘இந்துத்வ’ எழுத்தாளர்களை முகமதியஎ என்று அழைக்காதே என்று ‘போட்டுத்தாக்கும்’ முஸ்லிம் பதிவர்கள் - பத்திக்கு ஒரு தடவை ‘முகமதியம்’ - முகமதியர்’ என்று கூறும் தாடிக்காரரின் வார்த்தைகளை கண்டு வாய் மூடி இருப்பதேன்? கருப்புச்சட்டைக்கு பயமா? :))

இப்படிக்கு
ஒரு இந்து

Unknown said...

பிறைநதி,
நாத்தீகம் என்பது நம்பிக்கையாளர்களை நக்கல் அடிப்பது இல்லை. நம்பிக்கைகளை கேள்வி கேட்பது - என்று ஒரு ‘பிரபல’ பதிவர் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் பெரியாரோ - மதத்தில் காணப்படும் நக்கல் அடிக்கவேண்டிய விசயங்களை-மூடநம்பிக்கைகளை நக்கல் அடித்து, கேள்வி கேட்க வேண்டிய விசயங்களை தைரியமாக கேட்டு, நடைமுறையில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வை எந்த மதமாவது முன்மொழிந்திருந்தால் அதை நாத்திகர்களே எதிர்த்தாலும் - தயங்காமல் துணிவுடன் எடுத்துரைத்தார் என்பது இஸ்லாம் பற்றிய அவரின் பேச்சிலிருந்து தெளிவாகிறது.

பெரியார் ஒரு உண்மையான் சிந்தனையாளர்..அவரின் பெயரை சொல்லி, பகுத்தறிவு கொள்கைகளை கடைப்பிடிப்பதாக கூறும் சில பதிவர்களை பெரியார் பாணியிலேயே அழைப்பதாக இருந்தால் ‘வெங்காயம்’ என்ற வார்த்தை தான் நிணைவுக்கு வருகிறது.

Anonymous said...

உங்களின் மதக்கொள்கையை தூக்கிப்பிடிக்க நாத்திக ‘பெரியாரை’ துணைக்கு அழைத்திருப்பது உங்களின் சந்தர்ப்பவாதத்தை காட்டுகிறது..

இந்து மக்களுக்கு பிற மத வழிபாடுகளை மதிக்கும் பழக்கமும், அதில் கலந்து கொள்ளும் பழக்கமும் உண்டு, ’எம்மதமும் சம்மதம்’ என்ற உயர்ந்த கொள்கையுடையவர்கள், அதனால்தான் உங்களின் ‘நாகூர் ஆண்டவர்’ தர்காவில் உண்டியல் நிரம்பி வழிகிறது. இந்து மதக்கொள்கை பிடிக்காது - ஆனால் இந்துக்கள் உங்களின் உண்டியலில் போடும் பணம் மட்டும் பிடிக்க்குமா?

அரபு நாட்டிலிருந்து வந்து ‘வாள்’ மூலம் பரவிய மதத்தை விட இந்திய இந்து மதம் தாழ்ந்தது அல்ல என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். தயவு செய்து இந்தப்பதிவை உடனடியாக நீக்குங்கள்..

உண்மையான முஸ்லிமாக இருந்தால் இந்த பின்னூட்டத்தை வெளியிடுங்கள்..

இப்படிக்கு
உண்மையின் குரல்

பிறைநதிபுரத்தான் said...

உங்களின் மதக்கொள்கையை தூக்கிப்பிடிக்க நாத்திக ‘பெரியாரை’ துணைக்கு அழைத்திருப்பது உங்களின் சந்தர்ப்பவாதத்தை காட்டுகிறது..
- உண்மையின் குரல்

சாதீயத்தை அழைக்க தந்தை பெரியார் ‘இஸ்லாத்தை’ துனைக்கழைத்தார் என்ற வரலாற்று நிகழ்வை மட்டும் சுட்டிக்காட்டவில்லையா இந்தப்பதிவு?

நான் ’எழுதாததை’ படிக்க உங்களால் எப்படி முடிகிறது?

இந்து மக்களுக்கு பிற மத வழிபாடுகளை மதிக்கும் பழக்கமும், அதில் கலந்து கொள்ளும் பழக்கமும் உண்டு, ’எம்மதமும் சம்மதம்’ என்ற உயர்ந்த கொள்கையுடையவர்கள். அதனால்தான் உங்களின் ‘நாகூர் ஆண்டவர்’ தர்காவில் உண்டியல் நிரம்பி வழிகிறது. இந்து மதக்கொள்கை பிடிக்காது - ஆனால் இந்துக்கள் உங்களின் உண்டியலில் போடும் பணம் மட்டும் பிடிக்க்குமா?
- உண்மையின் குரல்

அய்யா, இஸ்லாமியர்களின் வேதம் முஸ்லிம்களையே நாகூருக்கு போகக்கூடாது என்று தடுப்பது உங்களுக்கு தெரியுமா? ‘தர்கா’வின் பெயரால் முஸ்லிம் ’புரோகிதரர்கள்’ அப்பாவி மக்களை மூடநம்பிக்கைகளை மூலதன்மாக கொண்டு ‘மந்திரித்தல்’ ‘தாயத்து’ போன்ற காசு பறிக்கும் வேலைகளை செய்வதை வன்மையாக கண்டிக்கிறது. தர்காவுக்கு சென்று உண்டியலை நிரப்பும் ’ஏமாளிகளுக்கும்’ ‘கோமாளிகளுக்கும்’ இஸ்லாம் பொறுப்பேற்காது.

அரபு நாட்டிலிருந்து வந்து ‘வாள்’ மூலம் பரவிய மதத்தை விட இந்திய இந்து மதம் தாழ்ந்தது அல்ல என்பதை புரிந்துக்கொள்ளுங்கள்.
- உண்மையின் குரல்

இந்தக்கதையை கேட்டு கேட்டு புளித்துப்போய்விட்டது வேறு ஏதாவது ’புதுசா’ சொல்லுங்கள். பூநூலும் போட்டுக்கொள்ள அனுமதிக்க மாட்டீர்கள் - ‘தொப்பி’ போட்டுக்கொண்டால் ஏன் குதியாய் குதிக்கிறீர்கள்.:))

இந்து மதம் ’தாழ்ந்தது’ என்று என் பதிவில் எங்கே குறிப்பிட்டிருக்கிறேன்.

தயவு செய்து இந்தப்பதிவை உடனடியாக நீக்குங்கள்..
- உண்மையின் குரல்

நீக்க முடியாது.

உண்மையான முஸ்லிமாக இருந்தால் இந்த பின்னூட்டத்தை வெளியிடுங்கள்..
- உண்மையின் குரல்

வெளியிட்டுவிட்டேன்.:))

பிறைநதிபுரத்தான் said...

முஸ்லிம்களை - முகமதியர்கள் என்று விளித்து எழுதும் ‘இந்துத்வ’ எழுத்தாளர்களை முகமதியஎ என்று அழைக்காதே என்று ‘போட்டுத்தாக்கும்’ முஸ்லிம் பதிவர்கள் - பத்திக்கு ஒரு தடவை ‘முகமதியம்’ - முகமதியர்’ என்று கூறும் தாடிக்காரரின் வார்த்தைகளை கண்டு வாய் மூடி இருப்பதேன்? கருப்புச்சட்டைக்கு பயமா? :))

இப்படிக்கு
ஒரு இந்து

அய்யா அனானி,
நீங்களும் - உங்களைச் சார்ந்த ‘வந்தேறி’ கும்பலும் இந்திய முஸ்லிம்களை - ‘இந்தியர்களே’ அல்லன்னு மூலை-முடுக்கு-சந்து-பொந்து-சாக்கடை-கக்குஸுன்னு போய் இன்னும் ‘பிரச்சாரம்‘ பன்னிக்கிட்டே இருக்குறீங்களே..

அய்யா பெரியார் இஸ்லாமியர்களை -
’முகமதியர்னு’ சொன்னதுக்கு நீங்க ஏன் கவலப்படறீங்க?

’இன இழிவு நீங்க இஸ்லாமே’ மருந்துன்னு - தீண்டப்படாதவங்கள -தாழ்த்தப்பட்டவங்கள -பிற்படுத்தப்பட்டவங்கள ந்ல்ல புத்தி சொல்லி அனுப்பிவச்சதாலே தானே - உங்க கும்பலுக்கே ‘தந்தை பெரியாரை’ பிடிக்காமல் போனது..

’சிண்டு’ முடிக்க வேற எங்கேயவது போங்க.